Friday 29 December 2017

சங்ககாலத்திற்கு முன்னரே பெண்களின் வர்ணனையும் உவமைகளும் தொடங்கிவிட்டது.


உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!


That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)


This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.


Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...