#நான்_ஏண்_அவளை_சந்தித்தேன்....
நான் என் அவளை காதலித்தேன்....
வாழ்க்கையின் பல இன்னல்களை, துன்பங்களை எல்லாம் யோசித்த வாறு அந்தக் கடற்கரை அலைகளில் கால் பதித்து அன்று நான் ஏன் அங்கே நடந்து சென்றேன்?
வருஷ ருதுவின் அந்த ஆவணி மாத முதல் நாளன்று ஏன் என் காலில் இடரிய அந்த அஸ்திரம்...
காவிரி நதி தன் பெரும்புணலைக் கடலில் பாய்ச்சும் சங்கமத் துறைக்கு அருகில் வந்தபோது காலை எதோ சட்டென்று தடுக்கவே... எண்ணங்களில் இருந்து விடுபட்டு சட்டென்று கீழே குனிந்து காலில் இடரிய பொருள் எதுவாய் இருக்கும் என்று பார்க்க.... ஏன் எங்கண்களை அகன்ற விரித்தேன்?
அகன்ற கண்கள் அப்படியே நிலைத்து நின்றன....
தடைபட்டது கால் மட்டுமல்ல.... உள்ளமும் பிரமை பிடித்து அப்படியே தடைபட்டு நின்றது....
காலை அல்ல... மனதைக்கூட அல்ல... என் வாழ்க்கையையே இடற , கடலரசன் வீசிய மோகனாஸ்திரம் போல் தரையில் கிடந்தாள் அந்தப் பேரழகி....
கடலலைகள் கொண்டுவந்து கடலோரத்தில் ஒதுக்கி காலில் இடரிவிட்ட அந்தக் கட்டழகி.... இருள் பெரிது சூழ்ந்துவிட்ட இரவின் அந்த நேரத்திலும் அளித்த பிரம்மை தட்டும் காட்சியைக்கண்ட என் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் பெரிதும் கலங்கிவிட்டதால்...
அடுத்தபடி என்ன செய்யவேண்டுமென்பதை அறியாமலும், அந்தப்பெண்ணுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை உணரக் கூடிய எந்த ஏற்பாட்டிலும் இறங்காமலும், எதோ பெரும் மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் கற்சிலை போல் அசையாமல் ஏன் நின்றிருந்தேன்?
எதற்கும் அசையாத இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இருகிவிட்டதையும், அப்படி இருகிவிட்ட நெஞ்சம் எந்தப்பக்கம் திரும்ப வழியின்றி தவிப்பதைக் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி என்னை நோக்கி ஏன் நகைத்தன?
அந்தச் சமயத்தில் என் காலில் வந்து மோதிச்சென்ற கடலலைகள் சலக் சலக் என்று சத்தம்போட்டு தங்கள் திரை நுரைகளைக் காட்டி, என்னை நோக்கி நகைத்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக்கூட காதில் லவலேசமும் வாங்கிக்கொல்லாமல் நீண்டநேரம் ஏன் நின்று கொண்டிருந்தேன்?..
அதுவரையில் என் கா தில் லேசாக விழுந்த கடல் அலைகளின் பெரிரைச்சலும் இரைச்சலும், தூரத்தே காவல்ப்புரிந்து நடந்து கொண்டிருந்த காவல் வீரர்களின் எச்சரிப்பு கூச்சல்களும் கூட, காலில் கிடந்த கட்டழகியைக் கண்ட வினாடியிலிருந்து அடியோடு அகன்று, உலகமே ஒலியில் இருந்து விடுபட்ட சூனியம் போலும், கீழே கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர்நிலை போலும் தோன்றக் கூடிய நிலைக்கு கொண்டுவந்து விட்டதாலும் அப்புறமா இப்புறமோ நகரக்கூடிய உணர்வையும் இழந்த கிடந்தேன்.
உணர்விழந்து கிடந்தது கரையில் கிடந்த மங்கையா? அல்லது அவளைப் பார்த்து பிரமை பிடித்து நின்றுவிட்ட நானா? என்பதை ஊகிக்க முடியாத கடல் நண்டுகள் சில அந்தப் பாவை மீதும், என் கால்கள் மீதும் ஏறி ஏறிச் சென்று பார்த்தும் யூகிக்க முடியாததால் அப்புறம் நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இருவரில் உணர்விழந்தது யாரென்பதை நிர்ணயிக்க முடியாது என்பதைப் பரசாற்றுவனபோல தூரத்தே நங்கூரம் பாய்ச்சி நின்ற சில மரக் கலங்கள் தங்கள் உடல்களை இப்படியும் அப்படி யுமாக அசைந்து கொண்டிருந்ததன்றி, அந்தப் பரை சாற்றலுக்கு கைத் தட்டி தாளம் போடுவன போல் பாய்மரத் தூண்களில் இருந்த கொடிகள் பலமாகக் காற்றில் படபடவென அடித்துக் கொண்டன
• கரையோரத்தில் ஒதுக்கப்பட்டாலும் பாதி தரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்த அந்த பாவையின் உடலைத் திரைகள் அவ்வப்போது வந்து வந்து தழுவி பின் வாங்கிய தாலும், சற்று தூரத்தே இருந்த கலங்கரை விளக்கத்தில் ஆடிய பந்தங்களின் வெளிச்சமும், கோட்டை உச்சி விளக்குகளின் சுடரொளி யும், லேசாக அந்தத் திறைகளின் மீது விழுந்து அந்தத் திறை நீரை பொன்மயமாக அடித்ததாலும் அந்தப் பேரழகியின் உருவத்தை மறைக்க முயன்ற கடலரசன் தன் திரைகளைக் கொண்டு பொண்ணிறப் போர்வையை போர்த்தி போர்த்தி எடுப்பது போல் தோன்றிய அந்த மோகணக் காட்சியைக்கண்ட என் உள்ளத்தை ஏன் அந்த பெரும் மாயை மூடிக்கொண்டது?
எதற்கும் அசையாத இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இருகிவிட்டதையும், அப்படி இருகிவிட்ட நெஞ்சம் எந்தப்பக்கம் திரும்ப வழியின்றி தவிப்பதைக் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி என்னை நோக்கி ஏன் நகைத்தன?
அந்தச் சமயத்தில் என் காலில் வந்து மோதிச்சென்ற கடலலைகள் சலக் சலக் என்று சத்தம்போட்டு தங்கள் திரை நுரைகளைக் காட்டி, என்னை நோக்கி நகைத்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக்கூட காதில் லவலேசமும் வாங்கிக்கொல்லாமல் நீண்டநேரம் ஏன் நின்று கொண்டிருந்தேன்?..
அதுவரையில் என் கா தில் லேசாக விழுந்த கடல் அலைகளின் பெரிரைச்சலும் இரைச்சலும், தூரத்தே காவல்ப்புரிந்து நடந்து கொண்டிருந்த காவல் வீரர்களின் எச்சரிப்பு கூச்சல்களும் கூட, காலில் கிடந்த கட்டழகியைக் கண்ட வினாடியிலிருந்து அடியோடு அகன்று, உலகமே ஒலியில் இருந்து விடுபட்ட சூனியம் போலும், கீழே கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர்நிலை போலும் தோன்றக் கூடிய நிலைக்கு கொண்டுவந்து விட்டதாலும் அப்புறமா இப்புறமோ நகரக்கூடிய உணர்வையும் இழந்த கிடந்தேன்.
உணர்விழந்து கிடந்தது கரையில் கிடந்த மங்கையா? அல்லது அவளைப் பார்த்து பிரமை பிடித்து நின்றுவிட்ட நானா? என்பதை ஊகிக்க முடியாத கடல் நண்டுகள் சில அந்தப் பாவை மீதும், என் கால்கள் மீதும் ஏறி ஏறிச் சென்று பார்த்தும் யூகிக்க முடியாததால் அப்புறம் நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இருவரில் உணர்விழந்தது யாரென்பதை நிர்ணயிக்க முடியாது என்பதைப் பரசாற்றுவனபோல தூரத்தே நங்கூரம் பாய்ச்சி நின்ற சில மரக் கலங்கள் தங்கள் உடல்களை இப்படியும் அப்படி யுமாக அசைந்து கொண்டிருந்ததன்றி, அந்தப் பரை சாற்றலுக்கு கைத் தட்டி தாளம் போடுவன போல் பாய்மரத் தூண்களில் இருந்த கொடிகள் பலமாகக் காற்றில் படபடவென அடித்துக் கொண்டன.
மந்திரத்தை மந்திரத்தால் தான் எடுக்க முடியும். அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க இஷ்ட்டப்பட்ட வானவெளி நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும் கோண்மீன் எனப்பட்ட செவ்வாய், புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல மெல்லப் ஒன்றுதிரட்டி,. எனது மன நிலையை அந்த அழகியின் மாயா சக்தியில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.
• விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது, நட்சத்திரங்களின் அசைவுக்கு தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது. என்று கூறும் ஜோதிட சாஸ்திரத்தை மெய்பிக்கவே அன்று கரையோரம் ஒதுங்கினவளைப் போல் அதுவரை தரையில் அடியோடு உணர்வற்றுக் கிடந்த அந்தப் பேரழகி யும், அடுவினியும், செவ்வாயும், புதனும் ஒளிவிடத் தொடங்கிய அந்த நேரத்தில், என் மனதைக் கட்டுப்படுத்தி இருந்த மந்திரக் கணையை மெள்ள அவிழ்க்கும், என் உணர்ச்சிகள் மெள்ள மெள்ள எனக்கு திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள்... அந்த ஒரு அசைவு என் இதயக் கட்டை அவிழ்த்து என்னை இந்த உலகத்துக்குள் கொண்டுவந்து விட்டதால்,
• கடலில் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவாமல் அவளை உற்றுப்பார்த்துக் கொண்டு அனாவசியமாக நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்த என் மதி ஈனத்தை நினைத்து பெரிந்தும் வியந்து.... சட்டென்று கீழே குனிந்து அவள் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தேன்... நாசியில் சுவாசம் ஒரே சீராகவும் நிதானமாகவும் வந்துகொண்டிருந்த தால்.. அந்த மாயச்சிலை எந்த காரணத்திற்காக கடலில் விழுந்திருந்தால் நீரை அதிகமாகக் குடிக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டேன்...
•
• இரண்டாம் ஜாமம் அதிகமாக ஏறிவிட்டதால் கூப்பிடு தூரத்தில் ஜன நடமாட்டம் ஏதும் இல்லை.
•
• #மாமலையணைந்த_கோன்மூப்_போலவும்
#தாய்_முலை_தழுவிய_குழவி_போலவும்...!
• கரிய மலையை அணைந்த விண்ணைப் போலவும்,
• தாயின் மார்பகத்தை ஆசையுடன் தழுவும் குழந்தை போலவும்,
• கடலை அணைந்து நின்றது காவிரி.... என்று பட்டினப் பாலை ஆசிரியர் வியப்பதுபோல் பெரும் புனலுடன் கடலில் கலந்த காவிரியின் சங்கமத் துறைக்கு அருகே அந்தப் பெண் ஒதுங்கிக் கிடந்ததாலும் காவிரியின் அகலத்தின் காரணமாக எட்டவே போய்க்கொண்டிருந்த படகுகளையும் குரல் கொடுத்து அழைக்க முடியாமல் போயிற்று எனக்கு.... இப்படி எந்த வழியும் கிட்டாது போனதாலும், அதிக நேரம் அவளை நீரிலே நிர்கதியாக தவிக்க விட்டிருப்பது வீரனுக்கு அழகல்ல என்பதாலும் என் வலிய கரங்கள் மெள்ள அவளை தரையில் இருந்து தூக்கின...
நல்ல அழகிய தோற்றமும் கட்டான சரீரமும் படைத்த அந்தப்பெண் தூக்குவதற்கு அத்தனை லேசாக இருப்பாள் என்று முதலில் நினைக்கவில்லை... போகப்போக அவள் மிக லேசாக இருப்பதைக்கண்டு, இத்தகைய ஒரு சொர்ணச்சிலை எப்படி பஞ்சுபோல இருக்க முடியும் என நினைத்து நினைத்து ஆச்சரியப் பட்டுக் கொண்டே அவளை கைகளில் தாங்கி, தூரத்தே இருக்கும் கரையோர குடிசைப்பகுதி க்கு நடக்கத்தொடங்கினேன்... மழை பெய்து மண்ணை குளிர்விக்க வேண்டிய ஆவணி மாதத்தில், மழையோ குளிரோ இல்லை என்றாலும், கைகளிலே தூக்கிச் சென்ற அந்த பெண்ணின் நனைந்த உடையில் இருந்த தண்ணீர் என் இதயத்தருகே வழிந்து ஒடியதாலும், என் கால்கள் நடந்த அதிர்ச்சியால் என் மார்பிலே புதைந்த அவளின் அங்களாவன்யங்களின் அசைவால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் வேகத்தாலும், அந்தப் பெண்ணின் சரீரத்தின் மென்மை உள்ளத்தே கிளப்பி விட்ட எத்தனையோ தடுமாற்றத்தினால்லும்,
என் உறுதியான கால்கள் கூட சற்று தடுமாற்றத்துடனேயே நடந்து சென்றன...
மஞ்சத்தில் கிடத்திவிட்டு அந்த நேரத்திலும், மூர்ச்சை முழுதும் தெளியாமல் இருந்தாலும், கடற்கரையில் இருந்து அவளை தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் அவள் குடித்திருந்த நீரும் வாய் வழியாக வெளியாகிவிட்டது ஓரளவு சூரனை வரப்பெற்று பஞ்சனையில் மெல்ல இப்புறமும் அப்புறமும் அசைந்தாள். புஷ்ப்பக் கொத்துகளுடன் காற்றில் ஆடும் பூஞ்செடி யைப்போல் அவள் மெல்ல அடைந்த போது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவன்யங்களின் வெண்மை புதுத் தந்தத்தையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்டு இப்படியும் ஒரு வெண்மை படைப்பில் இருக்க முடியுமா என்று பிரமித்துப் போனேன்...
அதிக வெண்மையான வெள்ளத்தில் புஷ்பத்தையும், செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும் கூட உவமை சொல்ல முடியாத அத்தனை வெண்மை வாய்ந்த அந்த கட்டழகியின் அழகிய வதனத்தை சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டி இருந்த கூந்தல் லேசாகப் பொன்னிறம் பெற்றிருந்தாலும், நெற்றியின் விசாலத்தில் படர்ந்திருந்த அயல்நாட்டு சாயையாலும், நான் தூக்கி வந்தது ஒரு யவனப் பென்மணிதான் என்பது நிர்ணயித்துக் கொண்டு, இயற்கை மிகவும் செழுமையாக்கி இருந்த அவள் எழிலனைத்தையும் பருகிக்கொண்டு நின்றேன்.
பிரதி தினம் எத்தனையோ நாடுகளின் அழகிகளைப் பார்த்து அலட்சியத்துடன் அசட்டை செய்து சென்றிருக்கும் என் கண்கள் கடலில் கண்டெடுத்த அந்த இயற்கைப் பேரெழிலில்
• சிக்கி மீள மாட்டாமல் தவித்தன. கிரேக்க நாட்டின் சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட தெய்வ மங்கையரின் முகத்தைப் போல உயிருள்ள பெண்களின் முகமும் இருக்க முடியும் என்று அவள் முகத்தை அன்று கண்ட பின்புதான் நம்ப முற்பட்டேன்....
வெள்ளை நுதலைக் கண்களிலிருந்து தடுத்து நின்ற அவள் கரிய புருவங்கள் வேண்டு மளவிற்கு திட்டமாக வளைந்திருந்தன. சற்று கீழே இருந்த கண்மணிகள் சங்கு மலரின் மேல் மூடியைப் போல் வென்மையுடன் இருந்ததன்றி, இமை ரோமங்களும் சங்குமலரின் நுனிக் கருப்பைப் பெற்றிருந்ததால், இயற்கை அவள் கண்ணுக்கென்று பிரத்யேகமாக வகுத்த சிமிழ் போல் கண்களை மூடி இருந்த மெல்லிய சருமங்கள் காட்சி அளித்தன.... கடல் சில சமயம் விசிறி போல் ஒதுக்கும் கிலிஞ்சலின் வேலைப்பாடு உயர்ந்ததா அல்லது அவற்றைப்போலவே கண்களை மூடிக் கிடந்த இமைகளின் அழகு உயர்ந்ததாக என்பதை அறிய மாட்டாமல் தினறிக் கொண்டிருந்தேன். இயற்கையின் அந்த சிமிழுக்கு அப்பால் வழவழப்பாக எழுந்து சற்றே குழி விழுந்து கிடந்த அவளது கன்னங்களில் சமுத்திர மணல் உருத்தியதால் புள்ளிப் புள்ளியாக எழுந்திருந்த இரத்தச் சிவப்பு கள் வைரத்தில் இழைக்கப்பட்ட சிவப்பு கற்கள் போல் தீபத்தில் பிரகாசி்ப்பதைக் கண்ட பின் ' இதைப் பார்த்துதான் அன்னை பூமி தன் கர்ப்பத்தில் வைரங்களையும், நீரிட்டமுள்ள சிவப்பு கற்களையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று எண்ணினேன். ஆனால் மணல் உருத்தியதால் கன்னத்தில் விழுந்த அந்தப் புள்ளிகள் அதிக சிவப்பா?
என்பதை மட்டும் பல நூல்களையும் கற்றுத் தெளிந்த என்னால் நினையிக்க முடியவில்லை....
மஞ்சத்தில் கிடந்த அந்த மங்கையின் உடல் சிருக்க வேண்டிய இடத்தில் சிறுத்து, எழுச்சி பெறவேண்டிய இடத்தில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யௌவனத்துக்கு இலக்கணம் வகுக்காவே பிரம்மன் அவளை உருவாக்கியது போல். தோன்றியது எனக்கு. தன் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் கடலரசன் தன் அலைக் கரங்களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களில் எல்லாம் பல வாளிகளால் தாக்கப்பட்டு, புயலில் அடிபட்ட மரக்கலம் போல் அல்லாடினேன்...
ஈரமான அவள் தலையை துவட்டிவிட்டு, அவள் மலர்ப் பாதங்களைத் துடைத்து கையால் சூடுபரக்க தெய்த்துவிட்டபின், விளக்கொளியில் அவள் அருகே அமர்ந்தேன், என் முகம் அவள் முகத்திற்கு சமீபத்தில் இருந்ததால் உஷ்ணமான என் மூச்சு அவள் கபோலங்களை தடவியதால் வெண்மையான அவள் கண்ணங்களில் மெல்ல இரத்தச் சிவப்பு படிந்ததல்லாமல், சூரிய ரச்மியின் உஷ்ணம் பட்ட மாத்திரத்தில் இதழ் விரிக்கும் தாமரை போல் அவள் வதனமும் மெள்ள மெள்ள விகசிக்கத் தொடங்கி அடுத்த சில வினாடிகளில் கடற்கிலிஞ்சல்களைப் போன்ற இதழ்களின் குமிழ்கள் நீங்கவே, கடல் நீரைவிட நீல நிறம் படைத்த அழகிய கண்கள் இரண்டு உறுதியுடன் என்னை பார்த்தன....
#அந்தக்_கண்கள்....!
இயற்கையின் சிருஷ்டியில் கடல், வானம் இவ்விரண்டு நீலத்தைத் தவிர வேறு நிறத்தை உவமை கூற முடியாத அந்த நீலமணிக் கண்கள்.....!
வானத்தின் பெரும் பாகத்தை வெண்ணிற மேகங்கள் மூடி அதன் இரண்டு வட்டங்களை மட்டும் காட்டுவது போல் அந்த நீலமணிகளைச் சுற்றி வெளேரென்று பால்விழிகள்...!
கடலின் சூழலைக் காட்டும் இரண்டு சுழிகளை மட்டும் விட்டு மற்ற இடங்களைப் பணி மூடி விட்டதோ என்ற பிரமையை ஊட்டும் அந்த அற்புதக் கண்கள்... வானைவிட விசாலமாகவும், கடலைவிட ஆழமாகவும், அந்தக் கண்களில் தெரிந்தன சிந்தனை...!
அந்தக் கண்களைக் கண்டு இப்படியும் உண்டா என்று பிரமித்த வண்ணம் உட்கார்ந்திருந்த என் மீது மற்றுமொரு மாய வலையை வீச அவள் இதழ்கள் புன்முறுவலால் சற்றே விரிந்தன....
ஏற்கனவே மயக்கம் தரும் நீரோட்டத்தைப் பெற்றிருந்த அவள் செவ்விய அதரங்களில் இதழ்களுக்குள்ளே த்ஹெரிந்த முல்லைப் பற்களிலும் அவை பட்டு செம்மையும் வெண்மையும் கலந்த இந்திர ஜாலத்தை சிருஷ்ட்டித்ததன் காரணமாகவும், விழித்துப் பார்த்ததும் அவள் உள்ளத்தே எழுந்திருந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பின் விளைவாக எழுந்த பெருமூச்சு அவள் உடலை மூடி இருந்த கம்பளியை மேலே அடிக்கடி எழுப்பி எழுப்பி மறைவுக்குள்ளிருந்த எழிலின் அற்புதத்தை வலியுறுத்தியதாலும், நான் அந்த மாயா தேவியின் அழகு என்ற மாய வலைக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டேன்.
பேரரசுகளின் ராணிகளின் கம்பீரத்தை தோற்கடிக்கும் கம்பீரத்துடன் கட்டிலிலிருந்து மெள்ள எழுந்த அந்த அழகு, நான் கொடுத்த பட்டுத் திரைச்சீலையால் உடலை கழுத்திலிருந்து கால் வரையிலும் மூடி ஈர உடையை கால் மூலமாகக் கீழே நெகிழ விட்டாள். பிறகு என்னை வெளியே செல்லும்படி கையால் சுட்டி, நான் வெளியில் சென்றதும் கதவை சாத்திக்கொண்டு தன அலங்காரத்தை நிதானமாக முடித்தாள்.
திரும்ப அவள் கதவைத் திறந்தபோது அவள் அளித்த தோற்றத்தைக் கண்டு அசவற்றுப்போனேன்... திரைச் சீலையாய் இருந்தாலும் வெகு அழகாக அதை அவள் உடலில் சுற்றி அதன் ஓரத்தைக் கிழித்து இடுப்பில் கச்சைபோல் கட்டி இருந்தால். அவள் உடலின் மேற்பகுதியை சுமக்க மாட்டாமல் சுமந்த அந்த திரைச்சீலைப் பட்டு அவள் கழுத்தைச் சுற்றி வளைத்து முடி போடப்பட்டிருந்தது.தலையை நன்றாகத்துவட்டி அழகாக ஒரு கொண்டையையும் போட்டிருந்த அவள் சிரத்தை கவனித்த நான், “இயற்கை அவளுக்கு அளித்த இந்த கிரீடத்தை விட மனிதர் அளிக்கும் பொற்கிரீடம் எந்த விதத்தில் உயர்ந்தது”? என்று பொன்னையே பழித்தேன்.
மயக்கும் அவள் அழகினால் மெய்மறந்து சிலையென நின்ற என்னை அருகில் வரும்படி அவள் சைகை காட்டினாள். மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அவள் அருகில் சென்று ஏன் என்னை அழைத்தாய் என்றேன்... பதிளில்லாதால் அவளுக்கு தமிழ் தெரியாதோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில்....
கவலைப்பட வேண்டாம், உங்கள் மதுரமான தமிழ் மொழி எனக்கு தெரியும், என்று நல்ல தமிழில் பேசத் துவங்கினாள். திகைத்து அவளைப் பார்த்து திரும்பிய என்னை நோக்கி, அவள் மலர் விழிகள் சிரித்தன....!
பட்டுத் திரைச்சீலையால் உடலை மூடி, மாலைக் கதிரவனின் பொற்கதிர்கள் போன்ற மயிரிழைகளைத் திரட்டி கொண்டையிட்டதால் ஏற்பட்ட அவளின் இணையற்ற வனப்பு, மலர் விழிகளில் சற்றே துளிர்த்த சிரிப்பு, செம்பருத்திச் சிவப்புக் கொண்ட இதழ்களில் இருந்து உதிர்ந்த தமிழ் மொழியின் மதுரமான உச்சரிப்பு-இவற்றால் சொர்க்க லோகத்தில் சஞ்சரித்த நான் தமிழகத்தின் மகத்தான கரங்கள் எத்தனை தூரம் வரை நீண்டு கிடக்கின்றன என்பதையும்,. தமிழமுதமும், கலைச் செல்வமும் எந்தெந்த இடங்களை நாடி பெரும் தென்றலை வீசி மகிழ்ச்சி அளித்திருக்கின்றன என்பதையும் எண்ணிப் பார்த்துப் பூரித்துப் போனேன். அத்துடன் மனித வரலாற்று மேடையில் தமிழ்ப் பெருமக்கள் அரசு செலுத்தும் பொற்காலத்தில் நான் வாழ்வதை எண்ணிப் பெருமிதம் கொண்டேன் ஆதலால் என் வதனத்திலே அதுவரையில் இல்லாத பெரும் சோதியொன்று படர்ந்தது. கனவுலகில் சஞ்சரித்த இதயம் கண்களின் பார்வையையும் அங்கு அழைத்துச் சென்றது.
சிறிது நேரத்திற்கு பிறகு கனவுலகில் இருந்து மீண்டு அவளை நோக்கி என் கண்களை திருப்பினேன் .தீபச்சுடரின் ஒளி அவளின் பொன்னிறக் கொண்டையில் விழுந்ததால் பொற்பாவையாகவே விளங்கிய அவள் எழில் வதனத்தில் விஷமத்துடன் விளையாடிய அவள் நீலமணிக் கண்கள் அப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்தன. இதற்கு பலம் கூட்ட இஷ்ட்டப் பட்டனபோல் விரித்த அவள் உதடுகள் முத்துப் பற்களின் ஓரங்களை மாத்திரம் லேசாகக் காட்டி நகைத்தன. அப்படிப் புன்முறுவல் கூட்டி விஷமச் சிரிப்பு சிரித்ததாலும், தமிழிலேயே பேசத்தொடங்கி என்னை திகைக்க வைத்து விட்டதாலும், நிலைகுலைந்து நின்றுவிட்ட என் சிந்தனைத் துளிகளை மீண்டும் சிதறடிக்கும் நோக்குடன் ஜலதரங்கத்தின் ஸ்வர ஜாலங்களைப்போல கலகலவென இன்பமான நகைப்பு ஒளிகளை உதிர்த்துவிட்டு, என் தோள்களில் தன இரு கைகளையும் வைத்து என் கண்களுடன் தன கண்களையும் சிறிது நேரம் உறவாட விட்டாள். பிறகு என்னைப் பார்த்து கேட்டாள்... யோசனை பலமாய் இருக்கிறதே என்று....
அந்த நீலமணிக் கண்களின் மாயாஜாலம் எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை அந்த சில வினாடிகளில் புரிந்துகொண்டேன். கடலை விட ஆழமான அந்த நீலமணிக் கண்கள் என்னைக் கவர்ந்து நின்றதால், நான் அசையக்கூட சக்தி இல்லாதவனானேன். அந்தச் சில வினாடிகளில் என் சிந்தனையில் இருந்து பூம்புகாரின் பெரும் கோட்டை வாயில்கள் மறைந்தன. தமிழர் பெருமை மறைந்தது. மணிவண்ணன் கோட்டமும் மறைந்தது. புகாரின் இருபுறமும் ஒளிரவிட்டு பெரும் நீர்பரப்புடன் ஜொலித்த சூரிய குண்டம், சோம குண்டம் எனும் ஏரிகள் கூட மறைந்தன. தெரிந்தவை இரண்டே இரண்டு.......! சூரிய குண்டத்தையும் சோம குண்டத்தையும் விட, அதிகமாக ஒளிவிட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டே கண்கள்.! அழகிய இமைகளுக்கு கீழே ஒளிவிட்ட அந்த நீலமணிக் கண்கள்...!
என்னை அவளோடு கலந்தது
அந்த நீலமணிக் கண்களா ?
அவள் உடலின் வனப்பா?
அவளின் எழில்மிகு அழகா?
மதுர மொழி பேசும் உதடுகளா?
என்று இப்போதுவரை விடை தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்...
என்னை வருடக்கணக்கில் தவிக்க விட்டு தன்னை தேட வைத்த அந்த யவன நாட்டுப் பேரழகியை...
என்னை அலையவைத்த
அந்த கிறுக்கன் சாண்டில்யனையும்...தான்...
Wednesday 11 April 2018
என் காதலி... என் ராணி... யாரென்று சொல்கிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1
கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...
-
Ganesha - Global God in a Globalised World Few people in India know that innumerable Ganesha temples exist from the medieval era in far fl...
-
உலக இலக்கியங்களில் தலைசிறந்த இடத்தைப் பெற்றிருப்பவைகளில் ராமாயணமும் ஒன்று. மனிதன் தனது நல்ல ஒழுக்கத்தால் தெய்வாம்சம் பெறுவது எப்படி என்பதை ...
No comments:
Post a Comment